Tuesday, April 5, 2011

நடிகை ..

அந்த பிரமாண்டமான அரங்கத்தில் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரங்கம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. விழாவின் இடையில் ஆடல் பாடல் என கலை நிகழ்சிகள் தொடர்ந்து மேடையில் அரங்கேறி பார்வையாளர்களுக்கு ஆனந்தத்தை கொடுத்தவண்ணமிருந்தது. நடிகர்கள், நடிகைகள் அனைவரும் முன் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தனர். முன்னனி நடிகைகளான அஜிதாவும், காயத்ரியும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை அனைவரும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பார்வைகளினிடையே
        ஏன் உங்கள் கணவர் வரவில்லை என அஜிதா காயத்ரியிடம் கேட்டாள்.
         அதற்கு காயத்ரி “அவருக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு எனக் கூறினாள்.  வெளியில் இவ்வாறு கூறிச் சமாளித்தாலும், உள் மனதில் வீட்டில் அன்றாடம் நடக்கும் வலி மிகுந்த நிகழ்வுகளை எண்ணி வருந்திக் கொண்டுதான் இருந்தாள்.
          திருமணமான பிறகு காயத்ரி நடிப்பதை நிறுத்தி விட்டிருந்தாள். அஜிதா, காயத்ரி இவர்களிருவருக்குமிடையேதான் யார் முதலிடம் என்ற போட்டி எப்போதும் நடந்துகொண்டிருக்கும் . இருவரும் நடிப்பதில் நல்ல தேர்ச்சியடைந்து பரவலாக ரசிகர்களை தக்கவைத்திருந்தனர்.
         மேடையில் இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகையின் பெயர்களை பட்டியலிட்டார் தொகுப்பாளர். அந்த பெயர்களில் அஜிதா மற்றும் காயத்திரியின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது.
        திரையரங்கம் முழுவதும் கரவோசம் எழுந்து கொண்டிருந்தது.  தொகுப்பாளர் அறிவிக்கப்பட்ட பெயர்களில் இருந்து சிறந்த நடிகையின் பெயரை அறிவித்து விருது வழங்க பிரபல முன்னனி  இயக்குனர் அரவிந்த் அவர்களை மேடைக்கு அழைத்தார். விசில் சப்தங்களுடன் ரசிகர்கள் ஆரவாரமிட்டனர். அஜிதாவும், காயத்திரியும் பரபரப்புடன் காணப்பட்டனர்.
        தங்கள் பெயர் வர வேண்டும் என இருவருமே மனதில் நினைத்துக் கொண்டனர். பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் மேடையேறிய அரவிந்த் இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகையாக காயத்ரியின் பெயரை அறிவித்தார். அதுவரை பரபரப்புடன் இருந்த காயத்திரி, தனது பெயரை கேட்டதும் வியப்புடனும், ஆவலுடனும் எழுந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்து புன்னைகைத்தாள்.
        வாழ்த்துக்கள் காயத்திரி என அஜிதா கூறிக் கொண்டே காயத்ரியின் கரம் பற்றினாள். காயத்ரியும் சந்தோசத்துடன் அஜிதாவை அன்போடு அனணத்துக் கொண்டாள்.விருது வழங்கும் இயக்குனர் அரவிந்த் காயத்ரியிடம் நீங்க இந்த படத்துல  கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டியிருக்கீங்க , நீங்க இன்னும் உங்களோடைய கலைச் சேவையை தொடரணும் எனக் கூறி பாராட்டினார். நடிகை காயத்திரி மகிழ்ச்சி கடலில் நீந்தினாள்.
        விழா முடிந்து பல கனவுகளோடு , விழாவில் நடந்த நிகழ்வுகளை கணவனிடம் ஆசையாய் பகிர்ந்து மகிழ வேண்டும் என எண்ணியவாறே காயத்ரி வீட்டில்  நுழைந்ததும் கோபத்தில் இருந்த கணவன் .எவனோடு ஊர் சுத்திட்டு இவ்வளவு லேட்டா .வீட்டுக்கு வர்ர, என தகாத வார்த்தைகளால் திட்டினான்  அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகை காயத்ரி .
இன்னைக்கு அவார்டு பங்ஷன் நடந்துச்சுல்ல,  அங்கதான் போனேன் , நீங்கதான் வரல , நீங்கவந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும் என ஆசையுடன் கூறினாள் காயத்ரி.
அதைக் கேட்டு ஆத்திரத்தோடு கணவன்  எங்கிட்டயே நடிக்கிறயா நாயே, எனக்  கூறிக் கொண்டே காயத்ரியின் கன்னத்தில்  பளார் என அறைந்தான். 
கீழே விழுந்த காயத்ரி மனதில்,விழாவில் தான் திரைப்படத்தில் நடித்ததை வாழ்ந்ததாக கூறியதையும், இங்கு உண்மையாக நடந்து கொண்டதை நடிப்பதாக கூறுவதையும் நினைத்து நினைத்து மனம் வெதும்பினாள். அவள் கண்களில் கிளிசரின் போடாமலேயே கண்ணீர். 

1 comment:

  1. உணர்வு பூர்வமான பதிவு

    ReplyDelete